Bread of Life Church India

சமநிலை சத்தியம்




ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்” (1 யோவான் 3:17,18).
ஒருவருடைய குறைவில் அவருக்கு உதவி செய்யாமல்நான் அன்பாக இருக்கிறேன்என்று சொல்லிக்கொள்வது மாய்மாலமான அன்பு என்று வேதம் கூறுகிறது.
உண்மையான தேவனுடைய அன்பு தேவையில் உள்ளவர்களுக்கு மனப்பூர்வமாக உதவி செய்யும். தேவன் என்னை மிகுதியாக ஆசீர்வதித்திருக்கிறார் என்று சொல்வதற்காக மிகுந்த ஆஸ்தியை தேவன் கொடுக்க வில்லை. குறைவில் இருக்கும் தன்னுடைய சகோதரனுக்கு குறைச்சலில் உதவி செய்யும் படிக்குதான் தேவன் ஆஸ்திகளை கொடுக்கிறார்.
நல்ல வேலையைக் கொடுத்து, நல்ல தொழிலைக் கொடுத்து நல்ல வருமானத்துடன் ஆஸ்திகளை தேவன் கொடுத்திருப்பது, இல்லாதவர்களைப் பார்த்து இழிவாக பேசவோ, இழிவாக நடத்தவோ அல்ல.
தன்னிடம் வந்துது எல்லாம் தனக்குதான், மற்றவர்கள் எப்படி போனால் எனக்கென்ன என்று இருப்பது பிசாசின் குணம். அது தேவ பிள்ளைகளின் குணம் அல்ல.

இரகசிய வருகை உண்டா?



இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கியே, தங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடர்கின்றனர். கிறிஸ்தவத்தின் ஆணி வேராக இருக்க கூடியவை மரித்தவர்களின் உயிர்த்தெழுதல், நித்தியமான பரலோக வாழ்க்கை.
இதுவே விசுவாசமும், முழுமையாக கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களின்  நம்பிக்கையுமாக இருக்கிறது. மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால், பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, நித்திய வாழ்க்கைக்கு நேராக பயணிப்பவர்கள், இந்த உலகத்தின் ஆளுகையில் இருந்து, தேவனுடைய ஆளுகைக்குள்ளாக வருகிறார்கள்.
திருச்சபை ஐக்கியத்தில் நிலைத்திருந்து, தேவனுடைய வார்த்தைகளுக்கு முழுமையாக கீழ்ப்படிந்து, தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் இந்த உலகத்தை முதன்மையாக வைக்காமல், தேவனையே முதன்மையாக வைத்து வாழ்ந்து, இயேசு கிறிஸ்துவை தங்கள் ஆதாயமாகக் கொண்டு, வேதாகம ஒழுங்குகளுக்கு கீழ்ப்படிந்து, விசுவாச வாழ்வில் நாளுக்கு நாள் வளர்ந்து பெருகி, இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு எப்பொழுதும் ஆயத்தமாக காத்திருப்பவர்களையும், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களையும், தன்னுடன் அழைத்து செல்லும்படியாக இயேசு கிறிஸ்து மத்திய ஆகாயத்தில் வருவதையேஇரகசிய வருகைஎன்று அழைக்கப்படுகிறது.

உங்களுடன் ஒரு நிமிடம்



கிறிஸ்துவுக்குள் பிரியமான ஜீவ அப்பம் குடும்ப, வாசக  அன்பர்களுக்கு, நித்திய தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த புதிய ஆண்டில் மறுபடியும் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
ஜீவ அப்பம் மாத இதழ் தேவனால் கொடுக்கப்பட்ட ஊழியம் என்பதை கர்த்தர் மறுபடியும் உணர்த்தி இருப்பதால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.  இந்த ஊழியத்தில் தேவனுடைய கரம் இருப்பதினால் தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
இந்த 2017 புதிய வருடத்தில் புதிய கிருபைகளை, நன்மைகளை, ஆசீர்வாதங்களை கர்த்தர் நிறைவாக தருவாராக.
கடந்த சில மாதங்கள் நமது ஜீவ அப்பம் மாத இதழ் வெளியிட முடியாமல் தடைகள் காணப்பட்டன. அநேகர் போன் மூலமாக விசாரித்தீர்கள் நன்றி. இந்த மாத இதழுக்காக சிலர் பிரயாசப்படுகிறீர்கள், ஜெபிக்கிறீர்கள், உங்கள் குறைவுகளிலும் இந்த ஊழியத்தை தாங்குகிறீர்கள், நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

பரவச பயணம்


வான்மதியின் வண்ண ஒளியில், எண்ணமெல்லாம் தென்றலின் தீண்டலில் பரவசமாய் குலுங்கும் வண்ண மலர்களைப் போல்  துள்ளிக்கொண்டிருக்க, வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்களை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஆபிராம்.
கடவுளின் படைப்புக்கள் எவ்வளவு அருமையானவைகள்,! இந்த உலகை கடவுள் எவ்வளவு இரசனையுடன் படைத்துள்ளார்! எத்தனை நேர்த்தி,! எவ்வளவு அற்புதம்.! இனிமையான இந்த இயற்கையை இரசிப்பதில்தான் எத்தனை ஆனந்தம். மனிதனுக்காக கடவுளின் படைப்புக்கள் இதமாக உள்ளதுஎன்று அவன் நினைவலைகளில் மூழ்கியிருக்க, தன் பணிகளையெல்லாம் முடித்து விட்டு, தன் கணவனின் அருகில் வந்த சாராய், “என்னங்க இன்னும் உறக்கம் வரவில்லையா?” என்று அன்புடன் விசாரித்து அவன் தலையை கோதி விட்டாள்.

வானத்து நட்சத்திரங்கள்


நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்” (ஆதி 22:17) என்று இந்த ஆண்டு கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்துள்ளார்.
தேவனுடைய ஆசீர்வாதங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது, ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் தேடி அநேகர் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க, தேவன் தமது பிள்ளைகளைக்கு, அவரை தேடி வருகிறவர்களுக்கு ஆசீர்வாதங்களை நிறைவாகக் கொடுத்து, இந்த ஆண்டு பெருகவே பெருக  செய்வேன் என்று வாக்குப்பண்ணுகிறார்.
இந்த வசனத்தின் பின்ணணியத்தை பார்க்கும் போது, தேவன் முதல் முதலாக ஆபிரகாமுக்கு இந்த ஆசீர்வாதங்களை வாக்குப்பண்ணுகிறார். தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் செய்து, அவனோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து அவனுடைய சந்ததிக்கும்  இந்த வாக்குத்தத்தத்தை நினைவு படுத்தி இந்த ஆசீர்வாதங்களுக்கு நேராக வழி நடத்துகிறார்.
நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்” (ஆதி 26:4)  என்று வேதம் கூறுகிறது.
ஆபிரகாமுக்கு சொன்ன வாக்குத்தத்தங்களை ஆபிரகாமிடம் மட்டும் சொல்லி அவைகளுக்குப் பின் அமைதியாக இருக்காமல், அவனுடைய சந்ததியாகிய ஈசாக்கிடமும் சொல்லி தேவன் உறுதிப்படுத்துகிறார்.
தேவனுடைய வாக்குத்தத்தங்கள் காலங்களை கடந்து, சூழ்நிலைகளை கடந்து, எந்த நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டதோ, அதை நிறைவேற்றும்படி தீவிரமாக  செயல்படுகிறது.

தேடல்



படைப்பா? படைப்பாளியா? 

தொடர்ச்சி........ 

பனி தூறல் சிணு சிணுக்க, குளிர் காற்று சிலு சிலுக்கும் அதிகாலை வேளையில், இழுத்து போர்த்திய போர்வைக்குள் தன்னை அடைத்துக்  கொண்டிருந்த தேராகு,  வழக்கம் போல் தன் பணியை துவங்கும் வேளை வந்து விட்டதென உணர்ந்து வேக வேகமாக எழுந்து இன்னும் குளிர் உடலை பதம்பார்க்க போர்வையை தன் உடல் முழுவதும் சுற்றியபடியே கதவை திறந்து வெளியே வந்தான்.
சந்திரன் பணியை முடித்து புறப்பட ஆயத்தமாக, ஆதவன் தன் பணியை துவக்க தாமதமாகிக் கொண்டிருக்க, விடிந்தும் விடியாததுமான இளங்காலையில் வெளியே வந்து பார்க்க  வீட்டிற்கு முன் முந்தின தினம் செய்து வைத்திருந்த சிலைகள் எல்லாம் நொறுங்கி, சிதறிக் கிடப்பதைக் கண்டு, அந்த குளிர்வேளையிலும் தன் உடல் சூடாக வியர்வைத் துளிகள் வெளியே வரலாமா என்று எட்டிப்பார்க்கயார் இந்த வேலையை செய்தது?என்று அங்குமிங்கும் பார்த்து, “நாகோர், ஆரான், ஆபிராம்என்று அழைத்துக் கொண்டே வீட்டிற்குள் ஓடினான்.
இதுவரை இல்லாத அளவு தன்னுடைய தந்தையின் சத்தம் கேட்டு, நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவர்கள் எழுந்து ஒன்றும் புரியாமல் பதட்டத்துடன் பார்க்கஎன்னங்க, என்ன ஆச்சு, ஏன் இந்த படபடப்புஎன்று தேராகுவின் மனைவி நிதானமாக தன் கணவனிடம் கேட்டுக்கொண்டே அருகில் வந்தாள்.
தன்னுடைய படபடப்பு குறையாமல்நாம் செய்து வைத்திருந்த எல்லா சிலைகளும் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது, இதுவரை இது போல் நடந்தது இல்லையே,” என்று தன் மனைவியைப் பார்த்துச் சொல்ல, சூழ்நிலையின் விபரீதத்தை புரிந்து கொண்ட ஆபிராமுக்குள்  பதட்டம் தொற்றிக் கொண்டது.

படைப்பா? படைப்பாளியா?



வண்ண சோலைகளும், இதமான தென்றலும், இனிமையாக சூழ்ந்திருக்கும் நதியோரம் அமைந்த அழகிய ஊர் என்னும் பட்டணம். ஊருக்கு நுழை வாயில் அருகே, அமைக்கப்பட்டிருந்தது கீற்று குடிசைகள்.
அதற்கு வெளியில் துள்ளி விளையாடும் சிறுவர்கள் நாகோர், ஆரான், ஆபிராம்  அங்கும் மிங்கும் ஓடிக்கொண்டிருக்க, “நாகோர், நாகோர்’’ என்று குடிசையின் வாயிலில் குனிந்து வெளியே வந்தபடி கூப்பிட்டான் தேராகு. விளையாட்டில் முழு கவனமாக இருந்த நாகோர் கவனிக்க வில்லை. அப்போதுஅண்ணா, அப்பா உங்களை கூப்பிடுகிறார்கள்’’ என்று ஆபிராம் சொன்னதும், “என்னையா கூப்பிட்டாங்க’’ என்று கேட்டுக்கொண்டே, வேகமாக ஓடி, மூச்சிறைக்கஅப்பா , கூப்பிட்டிங்களா?’’ என்றபடி தேராகு முன்பாக நின்றான் நாகோர்.
ஆமாம் நாகோர், நதிக்கு சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டும், நீயும் உனது தம்பிகளும் சென்று தண்ணீர் எடுத்து வாருங்கள். கடவுள் சிலைகள் செய்வதற்கு நான் போய் மண் எடுத்து வருகிறேன்’’ என்று சொல்லியபடி மண்வெட்டியையும், கூடையையும் எடுத்துக்கொண்டு, தனது மனைவியுடன் சென்றான்.
நாகோர், ஆரானையும், ஆபிராமையும் கூட்டிக்கொண்டு, தண்ணீர் எடுப்பதற்கு நதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் தண்ணீர் எடுத்து திரும்பி வருவதற்குள் தேராகும் அவன் மனைவியும் மண் எடுத்து வந்து சிலைகள் செய்வதற்கு மண்ணை குவித்து வைத்து தண்ணீருக்காக காத்திருந்தனர்.
தண்ணீர் கொண்டுவந்ததும் தண்ணீரை ஊற்றி மிதிக்க ஆரம்பித்தான் தேராகு, அதை மரத்தின் கீழ் நிழலில் நின்று, பார்த்துக்கொண்டிருந்தனர், நாகோர், ஆரான், ஆபிராம்.
சிறிது நேரத்திற்கெல்லாம் சிலை செய்யும் பதத்திற்கு  மண் வந்ததும் பல வடிவங்களில் சிலை செய்ய ஆரம்பித்தான் தேராகு. இதை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஆபிராம், நாகோரை பார்த்து, “அண்ணா, அண்ணா’’ என்று கூப்பிட, திரும்பி என்ன என்பது போல் ஆபிராமை பார்த்தான் நாகோர்.
அண்ணா, அப்பா  சிலைகள் செய்கிறார்களே, அந்த சிலை யாருடைய சிலை’’ என்று கேட்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். நின்று கொண்டிருந்த ஆரானையும், ஆபிராமையும் பார்த்து, “கீழே உட்காருங்கள்’’ என்று சொல்லி விட்டு, “அப்பா செய்கிற சிலைகள் கடவுள் சிலைகள், இதை எல்லா மக்களும் நம்மிடம் இருந்து வாங்கி சென்று வணங்குவார்கள், என்று சொல்லிக்கொண்டே ஆபிராம் முகத்தை பார்க்க ஆபிராம் சிரித்தபடி அமர்ந்திருந்தான்.
அதை பார்த்த நாகோர், “டேய் ஆபிராம் நான் கடவுள் சிலைகள் என்று சொல்லுகிறேன், நீ கேலியாக சிரித்துக்கொண்டிருக்கிறாய்? என்று கேட்டான். “அப்படி இல்லண்ணா, அப்பா காலால் மிதித்து, கையால் செய்யும் இந்த மண் பொம்மைகளா கடவுள்?, இதை எப்படி கடவுள் என்று மக்கள் வாங்கி சென்று வணங்குகிறார்கள்? எனக்கு ஒன்றும் புரிய வில்லை,  என்று சொல்லி விட்டு முன்பிலும் இன்னும் அதிகமாக சிரிக்க ஆரம்பித்தான்.
அவன் சிரிப்பதைக்கண்டு கோபம் கொண்டு, “ஆபிராம், நீ சிறுவன் உனக்கு ஒன்றும் தெரியாது, எதையும் சரியாக அறிந்து கொள்ளாமல், இப்படி கேலி செய்து சிரிக்க கூடாது. கடவுளுக்கு இது பிடிக்காது. என்று சற்று கடுமையான முகத்துடன் கண்டித்தான்.
நாகோர் கோபமான முகத்துடன் பேசுவதைக் கண்டு, “அண்ணா, உங்களுக்கு கோபம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக நான் இப்படி கேட்டு சிரிக்க வில்லை. இந்த மண் பொம்மைகள் எப்படி கடவுளாக முடியும்? கடவுள் இப்படியா இருப்பார்? என்ற என்னுடைய சந்தேகத்தையே கேட்டேன். தவறு என்றால் என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று தலை கவிழ்ந்து நின்றான்.
அருகில் நின்று அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ஆரான்இதற்காக ஏன் நீங்கள்  சண்டையிட்டு கொள்கிறீர்கள். வாருங்கள் போகலாம்’’ என்று சமாதானப்படுத்தி அழைத்துச்சென்றான்.