Bread of Life Church India

இஸ்ரேல் புனித பூமியா? எருசலேம் புனித ஸ்தலமா?



     இஸ்ரேல் பயணம் செல்வதும், இயேசு கிறிஸ்து  பிறந்து, ஊழியம் செய்த பகுதிகளையும், சிலுவைப்பாடுகள் பட்ட இடங்களையும் பார்த்து வருவது நல்ல விஷயம்தான். ஆனால் அதை தற்போது “புனித பயணம்’’ என்றும், புனித ஸ்தலம், புனித பூமி என்றும் அழைக்கிறார்கள். இதை வேதாகமத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்றால் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.  எந்த அடிப்படையில் இஸ்ரேல் புனித பூமி என்றும், எருசலேம் புண்ணிய ஸ்தலம் என்றும் அழைக்கிறார்கள் என்று விளங்கி கொள்ள முடிய வில்லை. இப்படிப்பட்ட செயல் ஒரு சிலரால் கிறிஸ்தவத்திற்குள் வந்தது கூட, வேறு சில மதத்தை பார்த்துத்தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
     இயேசு கிறிஸ்து உலக இரட்சகர். முழு உலகத்திற்கும் சொந்தக்காரர். அப்படி இருக்க இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு, தனிப்பட்ட ஒரு நாடோ, இடமோ, பொருளோ, மொழியோ, புனிதமாக இருக்கக் கூடாது. இருக்க முடியாது, அப்படி வேதாகமம் சொல்ல வில்லை ஒருவர் சொல்வதை பார்த்து மற்றவர், அவரை பார்த்து இன்னொருவர். என்று  இப்படி ஒரு குறிப்பிட்ட  நாட்டுக்கும், இடத்திற்கும், பொருளுக்கும் புனித தன்மை கொடுத்து, கிறிஸ்துவுக்கும், வேதாகமத்துக்கும் கொடுக்க கூடிய முக்கியத்துவத்தை மட்டுப்படுத்திவிடக்கூடாது. இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவன் எருசலேமை புனித பூமியாக எண்ணிக்கொண்டு சென்றால், கிறிஸ்தவன் அந்நியன் என்று, மற்ற மதத்தவர் கண்களுக்கு தொடர்ந்து அந்நியர்களாகவே தெரிவார்கள் அல்லவா?
கிறிஸ்துவின் சுவிசேஷம் இந்தியாவிற்கு வந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும், இன்னும் சிலரால் கிறிஸ்தவம் அந்நியம், இயேசு கிறிஸ்து வெளிநாட்டுக் கடவுள் என்று பேசப்படுகிறதற்கும், அப்படிப்பட்டவர்களின் தவறான புரிந்து கொள்ளுதலுக்கும்  சில கிறிஸ்தவர்களின் தவறுதலான பேச்சும், செயல்பாடுகளும்தான் காரணம்.
கிறிஸ்தவம் என்பது மதமோ, இடமோ, பொருளோ அல்ல, இது வாழ்வியல் முறை. மனிதனை ஆட்டிப்படைக்கும் பாவ அடிமைத்தனத்திலிருந்து இயேசு கிறிஸ்துவினால் விடுவிக்கப்பட்டு. புதிதாக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை. சகோதரத்துவம், அன்பு, தன்னைப்போல் மற்றவரையும் நேசித்தல். ஏற்ற தாழ்வு இல்லாமை. மனித சட்டதிட்டங்களுக்கு மட்டுமல்ல, தேவனுடைய சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு வாழுதல். அதனால்தான் இயேசு கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றும் கிறிஸதவன் இடத்தையோ, சிலை வழிபாட்டையோ ஏற்க வில்லை. ஏன் என்றால் ஒரு இடத்தை தேவனுடைய ஆலயம் என்று வேதாகமம் சொல்லாமல் “நீங்களே தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்கள் என்றும், தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசம் பண்ணுகிறார் என்றும் வேதாகமம் தெளிவாக நமக்கு போதிக்கிறது.
எருசலேம் என்று நமக்கு வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள பகுதிகள் உருவகமாக பரலோகத்தை நமக்கு காண்பித்து, உன்னதமான தேவன் வாசம் பண்ணும், பரலோகத்துக்கு நேராக நம்முடைய வாழ்க்கை பயணம் இருக்க வேண்டும் என்று போதிக்கிறது. பூமியில் இருக்கும் எருசலேமுக்கு ஒருவன் போனாலும் சரி போகாவிட்டாலும் சரி அது ஒன்றும் பெரிய காரியம் இல்லை, அது அவரவர் வசதி வாய்ப்புக்களை பொருத்தது. ஆனால் ஒரு மனிதன் கட்டாயமாக பரலோகத்துக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் அவன் பரிதவிக்க கூடிய மனிதன் என்பதில் துளி அளவும் சந்தேகமும் இல்லை. அதே போல இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவருடைய இரத்தத்தினால் தனது பாவங்கள் கழுவப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றும் மனிதன்தான் “திருச்சபை’’. மாறாக கல் மணல் சிமிண்டால் கட்டப்பட்ட கட்டிடம் அல்ல. இயேசு கிறிஸ்து தெளிவாக சொல்கிறார். இரண்டுபேராவது மூன்று பேராவது என்  (இயேசு) நாமத்தினாலே(பெயர்) எங்கே கூடி இருக்கிக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்று. எனவே கட்டிடங்களும் கூட திருச்சபை (மக்கள்) கூடி வருவதற்குத்தான்.
ஆகவே உண்மையாக, விசுவாசத்துடன் தேவனுடைய பிள்ளைகள் கூடுகிற இடத்திற்கு அவர் ( இயேசு)வந்த பிறகு அவரை தேடி சிலர் எங்கு போகிறார்கள் என்பது தெரிய வில்லை. புனித பூமி என்று இப்படிப்பட்டவர்கள் செல்வதால் என்ன புனிதம் அவர்களுக்கு உண்டாகிறது.? என்பதும் புரிய வில்லை.
பழைய ஏற்பாடு காலத்தில், எருசலேம் தேவாலயம் தனி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.  ஒரு யூதன் எந்த தேசத்தில் இருந்தாலும் எருசலேம் தேவாலயம் இருக்கும் திசையைப்பார்த்து தான் தொழுது கொள்வான். இதெல்லாம் பழைய ஏற்பாட்டில் உண்டு, இயேசு கிறிஸ்து இப்பூமியில் பிறப்பதற்கு முன்புவரை அப்படிப்பட்ட முறைகளை வேதாகமம் ஏற்றுக்கொண்டது. ஏன் என்றால், உலகம் முழுமைக்கும் ஒரு தேவாலயம்தான். அந்த தேவாலயம் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பனையாக, நிழலாக இருந்தது, அப்பொழுது எருசலேமைப்பார்த்து ஜெபம் செய்வதும், வருடத்துக்கு ஒருமுறை எருசலேம் பண்டிகைக்கு உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் எல்லா மக்களும் எருசலேமுக்கு சென்று பலி செலுத்தி வழிபட்டதும் ஏன் என்றால், இயேசு கிறிஸ்துவை பார்த்து, அவரை நோக்கி அவர்கள் வழிபட்டதற்கு சமமாக கருதப்பட்டது. ஆனால் இப்பொழுது, உருவகம் அல்ல, நிழல் அல்ல நிஜமான இயேசு கிறிஸ்துவே நமக்கு முன்பாக இருக்கிறார். இனிமேல் நிழலுக்கும், உருவகத்திற்கும் வேலை இல்லை.
கிறிஸ்துவை நாங்கள் மனித சரீரத்தில் அறிந்திருந்தாலும் இனிமேல் ஒருபோதும் அவரை மனித சரீரத்தில் அறிந்து கொள்ள மாட்டோம் என்று 2 கொரிந்தியர் 5:16 ல் வேதம் கூறுகிறது,  ஏன் இவ்விதமாக வேதம் கூறுகிறது என்றால், எப்பொழுது இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்து, மறுரூபமாக பரலோகம் சென்றாரோ அது முதல் சரீரத்தின் படியாக அவரை தெரிந்து கொள்ளுதல் அவசியம் இல்லை. காரணம் சரீரத்தில் அவர் செய்து முடிக்க வேண்டியவைகளை செய்து, நிறைவேற்றி விட்டார். இப்போது பரலோகத்தில் இருக்கிறார். நாம் கூப்பிடும் சத்தத்திற்கு உடனடியாக பதில் தருகிறார்.
இன்னும் அவர் சரீரத்தில் இருந்த இடங்களையே புனித இடமாக நினைத்து இருப்போமானால், அவர் முழு உலகிலும், தேசங்கள் கடந்து, மொழிகள் கடந்து, சாதிகள் கடந்து,  செயல்படுவதை மட்டுப்படுத்துவது போல் ஆகிவிடாதா?. ஆகையால் மறுபடியும் தெளிவாக சொல்லுகிறேன். வசதியிருந்தால், வாய்ப்புக்கள் இருந்தால் எருசலேம் மட்டுமல்ல முழு உலகத்தையும் கூட சுற்றி பார்த்து வாருங்கள் தவறு இல்லை. ஆனால் எருசலேம் பயணத்தை புனித பயணம் என்று அழைக்காதீர்கள். சொல்லாதீர்கள். இஸ்ரேல், எருசலேம், அதைச்சுற்றி உள்ள மற்ற நாடுகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள். இன்றைக்கும் இயேசு கிறிஸ்துவின் திறந்த கல்லறை அங்கே இருப்பதால், அது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை அழுத்தமாக பதிவு செய்து கொண்டிருக்கிறது. மேலும், வேதாகமம் கற்பனை கதாப்பாத்திரங்களாய், கற்பனையான ஏதோ ஒரு இடத்தில் நடந்தது என்று ஒருவரும் சொல்ல முடியாதபடிக்கு  சரித்திரத்தை சுமந்து கொண்டு அழியாமல் நிற்கிறது. எங்கு எங்கோ சென்று சுற்றிப்பார்க்க செல்வதைவிட இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்று பார்த்து விட்டு வருவது நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தும். ஆனால் அது புனித இடம் அல்ல, அங்கு சென்று வருவதால் எந்த புனிதத்தையும் நாம் பெற்றுக்கொள்ளபோவதும் இல்லை. இயேசு கிறிஸ்துவில் உள்ள நமது விசுவாசமே, மென்மேலும் பரிசுத்தத்திற்கு நேராக நம்மை வழிநடத்தும். இயேசுவே பரிசுத்தர்.
வேதாகமத்தின் அடிப்படையில் இஸ்ரவேல்,எருசலேம் புனித பூமி இல்லை என்ற கருத்தை முன் வைக்கும் போது, சில காலங்களாக இப்படியே சொல்லி, சொல்லி இதில் கலந்து போனவர்கள் உடனடியாக இந்த உண்மையை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் வேதாகம சத்தியத்தை சத்தமாக சொல்லித்தான் ஆகவேண்டும். எனவே இந்த செய்திக்கு பதில் கொடுக்க விரும்புகிறவர்கள் முதலாவது, வேதாகமத்தையும், கிறிஸ்தவ சரித்திரத்தையும் நன்கு ஆராய்ந்து பார்ப்பது நல்லது. தனிமனித தாக்குதல்கள் வேண்டாம். வேதாகமமே நமக்கு வழிகாட்டியாக இருப்பதால் அந்த வெளிச்சத்தில் செல்வதுதான் நமக்கு நல்லது. நம்முடைய பரலோக பயணத்திற்கு அதுதான் பாதுகாப்பு.
எனவே, இஸ்ரேல் புனித பூமி அல்ல, சரித்திர பூமி.

7 comments:

  1. நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் இஸ்ரவேல் தேச நாடுகளில் இயேசுகிறிஸ்துவை தேடாதீர்கள். அவர் வாழ்ந்த, நடந்த இடங்களை வணங்கி அதை புண்ணிய ஸ்தலமாக்கிவிடாதீர்கள். அங்கு விழுந்து வணங்கி முத்தம் செய்து கர்த்தர் வெறுக்கும் விக்கிரக வணக்க கிறிஸ்தவர்கள் என்ற தேவ கோபத்துக்கு ஆளாகாதீர்கள். அங்கு யோர்தான் நதியில் எடுக்கும் ஞானஸ்நானம் உங்களை பரிசுத்தமாக்காது. நீங்கள் பரலோகம் செல்ல அந்த ஞானஸ்நானம் உதவாது.

    இஸ்ரவேல் போவதற்கென்று நேர்ச்சையோ, பணசேமிப்போ செய்யாதிருங்கள். அந்த பணத்தை இயேசுகிறிஸ்துவை ஒருமுறைகூட கேள்விப்படாத மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும் மிஷனரி பணிகளுக்கு கொடுத்து உதவுங்கள். அதன்மூலம் பரலோகத்தில் உங்கள் பொக்கிஷத்தை சேர்க்கவும், சேமிக்கவும் பிரயோஜனப்படும். ஜெபித்து செயல்படுங்கள்................

    நன்றி.........jamakaran

    ReplyDelete
  2. இஸ்ரேல் புனித பூமியா? எருசலேம் புனித ஸ்தலமா? இக்கட்டுரையை எனது முக நூல் பக்கத்தில் வெளியிட விரும்புகிறோன்........உங்கள் அனுமதி தேவை...........

    ReplyDelete
    Replies
    1. நல்லது சகோதரரே, வெளியிடுங்கள், வந்து கருத்திட்டமைக்கு நன்றி.

      Delete
  3. இயேசுகிறிஸ்துவை ஒருமுறைகூட கேள்விப்படாத மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும் மிஷனரி பணிகளுக்கு கொடுத்து உதவுங்கள். அதன்மூலம் பரலோகத்தில் உங்கள் பொக்கிஷத்தை சேர்க்கவும், சேமிக்கவும் பிரயோஜனப்படும். ஜெபித்து செயல்படுங்கள்..............//

    சரியாக சொன்னீர்கள் பிரதர் !

    ReplyDelete
    Replies
    1. நன்றி, மனோ பிரதர்

      Delete
  4. சகோதரரே, இந்தக் கட்டுரையை உங்கள் பெயருடன் எங்களது முகநூல் பக்கத்தில் பயன்படுத்தலாமா? மேலும் நாங்கள் புதிதாக வெளியிடப் போகும் 'பூங்காற்று'என்ற பத்திரிகையிலும், உங்கள் பெயருடன் பயன்படுத்தலாமா?

    ReplyDelete
  5. கட்டுரை நன்று. காலத்திற்குத் தேவையான பதிவு.

    ReplyDelete