Bread of Life Church India

இயேசு கிறிஸ்துவை அப்பா என்று அழைக்கலாமா?

பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்” (எபி 2:11) என்று வேதம் கூறுகிறது. இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்துவை சகோதரரென்று வேதம் கூறுவதால் அவர் நமக்கு மூத்த சகோதரனாக இருக்கிறார். பிதாவை மட்டுமே நாம் அப்பா என்று அழைக்க வேண்டும்., இயேசு கிறிஸ்துவை அப்பா என்று அழைக்க கூடாது என்று சிலர் வாதிடுவது உண்டு.
வேதாகமத்தை வாசிக்கும் போது ஏதாவது ஒரு குறிப்பிட்டவசனங்களை மட்டும் வாசித்து மற்ற வசனங்களை தள்ளி விடுவது தற்கால வழக்கமாக மாறிவருகிறது. இதில் தேவ பிள்ளைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்விதமாக வாதிடுபவர்கள், இயேசு கிறிஸ்து சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதை மறந்து விடக்கூடாது.
இயேசு கிறிஸ்துவை குறித்து வேதம் கூறும் மற்ற வசனங்களையும் கவனிக்கலாம்.
1.       இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பன்
நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” (யோவான் 10:11)
2.       இயேசு கிறிஸ்து நல்ல நண்பர்
இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (யோவான் 15:10).
3.       இயேசு கிறிஸ்து மனுகுலத்தின் இரட்சகர்
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக்கா 2:10).
பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்” (1 யோவான் 4:14).
4.       இயேசு கிறிஸ்து எஜமான்
எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரை கட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 12;37).
5.       இயேசு கிறிஸ்து வேலைக்காரர்
மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்” (மத் 20:28).
6.       இயேசு கிறிஸ்து ராஜாதி ராஜா
ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது” (வெளி 19:16).
7.       இயேசு கிறிஸ்து சர்வ வல்லமையுள்ள கர்த்தர்
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்” (வெளி 1:8).
இவ்விதமாக இயேசு கிறிஸ்துவை வேதாகமம் பல பரிமாணங்களில் நமக்கு வெளிப்படுத்துகிறது. இதில் ஏதாவது ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை உதாசீனப்படுத்த வேதாகமம் அனுமதி கொடுக்க வில்லை.
சர்வ வல்லமையுள்ள கர்த்தரை அப்பா என்று அழைக்க வேதம் எந்த தடையும் செய்ய வில்லை. “அந்தப்படி, திரும்பவும்பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” (ரோமர் 8:15) என்று வேதம் கூறுகிறது. திரித்துவத்தில் பிதாவாக செயல்படும் தேவனை அப்பா என்று அழைக்க வேண்டும். குமாரனாக செயல்படுபவரை சகோதரன் என்று அழைக்க வேண்டும் என்றாலும் தேவத்துவத்தில் அவர்கள் ஒன்றாக இருப்பதால் அப்பா என்று அழைப்பதில் ஒரு தவறும் இல்லை.
இது போல் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை விட மரியாள் பெரியவர் என்பது போல போதிக்கப்படுகிறது. ஆகையால்தான் அநேக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தாய் இல்லாமல் பிள்ளையா? என்ற கேள்வியை கேட்பார்கள்.
இயேசு கிறிஸ்து  பூமியில் சரீரத்தில் இருந்த நாட்களில் மட்டுமே மரியாளுக்கு மகன். அவர் இப்பூமியில் மனிதனாக பிறப்பதற்கு முன்பாகவே இருக்கிற சர்வ வல்லமையுள்ள தேவன். இந்த அடிப்படையில் பார்க்கும் போது அவர் மரியாளுக்கும் தேவனாக இருக்கிறார். ஆகையால் தான்  மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்” (லூக்கா 1:38) என்று வேதம் கூறுகிறது.
ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்” (2 கொரி 5:16). ஆகவே இயேசு கிறிஸ்து சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்.