Bread of Life Church India

வந்தது சாமுவேலா ????





1சாமுவேல் 28ம் அதிகாரத்தில் மரித்த பின் சாமுவேல்தான் வந்து பேசினாரா இல்லையா? என்பது பல கால கட்டங்களில் பலரால் பல விதங்களில் ஆய்வுசெய்யப் பட்டிருந்தாலும், நாமும் இந்த வேத பகுதியை வேத வெளிச்சத்தில் தியானிக்கலாம்.

வேதாகமத்தில் இப்படிப்பட்ட கருகலான சத்தியங்கள் சில உள்ளன. இப்படிப்பட்ட கருகலான சத்தியங்கள் மூலமாக தேவன் நமக்கு என்ன உணர்த்த விரும்புகிறார். அல்லது என்ன சொல்ல விரும்புகிறார். இதில் இருந்து நாம் அறிந்து கொண்டது என்ன? அல்லது அறியப்போவது என்ன என்பதை சற்று விரிவாக ஆராய்ந்து பார்ப்போம். ஆவியானவர் உதவி செய்வாராக.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்தப் பகுதியில் மரித்துப்போன சாமுவேல் ஆவியாக வந்து பேசினாரா? என்பதை கருவாகக் கொண்டு வேதாகமத்தை தியானிப்போம்.
அதற்கு முன்பாக 28ம் அதிகாரத்தில் உள்ள  சம்பவங்களை கோர்வையாக நமது கண் முன் கொண்டுவரலாம்.
1.       28ம் அதிகாரத்திற்கு முன்பாகவே சாமுவேல் மரித்து விட்டார். (1 சாமுவேல் 28:3)
2.       அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறி சொல்லுகிறவர்களையும்
இஸ்ரவேல் தேசத்தில் இல்லாதபடிக்கு சவுல் துரத்தி விட்டான் (1 சாமுவேல் 28:3).

3.       பெலிஸ்தர் இஸ்ரவேலின் மேல் யுத்தத்திற்கு வருகிறார்கள் (1 சாமுவேல் 28:1)
4.       இஸ்ரவேலரும் சவுலும், யுத்தத்திற்கு ஆயத்தமாக நிற்கிறார்கள்(1 சாமுவேல் 28:4).
5.       பெலிஸ்தியரின் படைகளைக் கண்டு சவுல் பயப்படுகிறான் (1 சாமுவேல் 28:5).
6.       யுத்தத்தைக்குறித்து கர்த்தரிடம் விசாரிக்க சவுல் செல்கிறான் (1 சாமுவேல் 28:6).
7.       கர்த்தர் சவுலுக்கு பதில் கொடுக்கவில்லை. எதுவுமே பேசவும் இல்லை (1 சாமுவேல் 28:6).
8.       சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களிடம் விசாரிக்க, அஞ்சனம் பார்க்கும் பெண்ணை தேடி பார்க்க சொல்லுகிறான் (1 சாமுவேல் 28:7).
9.       சவுல் வேஷம் மாறி அஞ்சனம் பார்க்க, அஞ்சனம் பார்க்கும் பெண்ணைப் பார்க்க செல்லுகிறான் (1 சாமுவேல் 28:8).
இனி நடக்கும் சம்பவங்களை நாம் விரிவாக கவனிப்போம்.
வேஷம்மாறி செல்லும் சவுல் அந்த பெண்ணிடம் “நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பி வர செய்’’ என்று சொல்லுகிறான். தேவன் தனக்கு பதில் கொடுக்காததினால் மரித்த சாமுவேலை எழும்பிவர செய்து விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்கிறான்.
பயத்தின் உச்சத்தில் இருக்கும் சவுல், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு, தேவனுடைய சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுக்க தயங்குகிறான். தேவன் தடை செய்திருக்கும் அஞ்சனத்தின் மூலமாகக் கூட வருங்காலங்களைக் குறித்து அறிந்து கொள்ள முடியுமா? என்று முயற்சி செய்கிறான்.
மேலும் முன்பதாகவே அந்தப் பெண் யாரை எழும்பிவர பண்ண வேண்டும் என்று கேட்டதற்கு “சாமுவேலை எழும்பி வர பண்ணவேண்டும்’’ என்று 11 ம் வசனத்தில்  சவுல் சொல்லியிருக்க, 12 ம் வசனத்தில் சாமுவேலைக் கண்ட மாத்திரத்தில் அந்த பெண்  “ஏன் என்னை மோசம் போக்கினீர்’’  என்று சொல்லுவது அர்த்தமற்ற பேச்சாகவும், அது சவுலை ஏமாற்ற பயன்படுத்தும் வார்த்தைதானே தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை அறிந்து கொள்ளவேண்டும்..
ஒரு சம்பவத்தை வேதம் விளக்கும் போது அந்த இடத்தில் உள்ள மனிதர்களின் எண்ணம் எப்படி இருந்ததோ, அதை மையமாக வைத்தே எழுதப்பட்டிருக்கும், அந்தப்படி சவுலின் மனநிலை எப்படி இருந்ததோ, அப்படியே அதாவது, சாமுவேலே நேரடியாக வந்து பேசுவதாக நினைத்த சவுலின் எண்ணப்படி சாமுவேல் பேசும் உரையாடலைப்போல  இந்த பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் “அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்: அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்’’ (1 சாமுவேல் 28:14). இந்த வசனத்தின் அடிப்படையில் பிசாசின் ஆவியினால் அஞ்சனம் பார்க்கும் பெண், சொல்லுவதை வைத்து “அதினாலே சவுல் அது சாமுவேல் என்று அறிந்து கொண்டான்’’ என்று வேதம் சொல்லுகிறது.
வஞ்சிக்கும் பிசாசு தானாகவே ஒருவன் தனது வலையில் விழவேண்டும் என்று அதற்கு தகுந்தாற்போல் தனது வஞ்சக வலையை விரிப்பான். அதை உணர்ந்து கொள்ளும் மன நிலையில் இல்லாத சவுலும் அந்த வலையில் தானே சென்று விழுகிறான்.


வந்தது சாமுவேல்தான் என்று சொல்லுகிறவர்கள் எடுத்துவைக்கும் குறிப்புக்கள்.

1. தன்னிடம் அஞ்சனம் பார்க்க வந்திருப்பது சவுல் என்பதை அந்த பெண் அறிந்திருக்கவில்லை.
2. அந்த பெண் யாரை எழுப்பவேண்டும் என்று கேட்கிறாள்.
3. அஞ்சனம் பார்க்கும் பெண் எதிர்பார்க்காமல் சாமுவேல் வந்ததால் அந்த பெண் அலருகிறாள். தன்னிடம் வந்திருப்பது சவுல் என்பதையும் அறிந்து கொண்டாள்.
4. அந்த பெண் சாமுவேலின் ரூபத்தை சொல்லுகிறாள்.
5. சாமுவேல் சவுலிடம் பேசுகிறார்.
6. சாமுவேல் (என்று சொல்லப்படும்) ஆவி தேவனுடைய சித்தத்தை பேசுகிறது.
7.      1 சாமுவேல் 28:16 ம் வசனத்தில் ‘அதற்குச் சாமுவேல் என்று வசனம் துவங்குகிறது.

8      நாளை நடப்பது பிசாசுக்கு தெரியாது, ஆனால் நாளை நீ என்னுடன் இருப்பாய் என்று சொல்வது சாமுவேல்தான்.

இப்படி எல்லாம் இருப்பதால் அஞ்சனம் பார்க்கும் பெண்ணாகவே இருந்தாலும், இந்த ஒரு இடத்தில் மட்டும் சவுலின் நிலையை உணர்த்த தேவனே அஞ்சனம் பார்க்கும் பெண்ணின் மூலமாக சாமுவேலை வரவைத்தார் என்று இப்படிப்பட்ட  காரணங்களை சொல்லுகிறார்கள்.

இப்போது நாம் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டிய சத்தியங்களை கேள்வியோடு பதிலை அறிந்து கொள்வோம்.

“சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக் கொண்டிருந்தான்’’ ( 1சாமுவேல் 15;35).

வந்தது சாமுவேல் என்றால் இந்த வசனத்திற்கு என்ன வியாக்கியானம் கொடுக்கலாம்.

உயிரோடு இருக்கும் போதே பார்க்க மாட்டேன், பேச மாட்டேன் என்று சொல்லி விட்ட சாமுவேல், சவுல் மரிக்கும் வரை பேச வில்லை என்று வேதாகமம் சொல்லுகிறது.
அப்படி இருக்க சவுல் அஞ்சனம் பார்க்கும் பெண்னிடம் வந்து, சாமுவேலிடம் பேச வேண்டும் என்று சொல்ல, அந்த அஞ்சனம் பார்க்கும் பெண் மூலமாக தேவ மனிதன் சாமுவேல் எப்படி வந்து பேசி இருப்பார்.
“சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும் போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை’’ (1 சாமுவேல் 28:6).
சவுலின் பின்மாற்றம், தேவனுக்கு பிரியமில்லாத நடக்கை, இவைகளை எல்லாம் கண்டு, ஆபத்து நேரத்தில் மட்டும் தன்னிடம் ஓடி வந்த சவுலிடம் எந்த விதத்திலும் பேச விரும்பாமல், நியாயமாக அந்நாட்களில். சொப்பனங்களின் மூலம், ஊரீம் தும்மீம் மூலம், தீர்க்கதரிசிகளின் மூலம் பேசி வந்த  தேவன் சவுலிடம் பேசாமல் மவுனமாகிவிட்ட பிறகு தேவன் தடை செய்திருக்கும் அஞ்சனத்தின் மூலம் அதாவது அநீதியான வழியில் சாமுவேலின் ஆவியைக்கொண்டு பேசுவாரா?
1சாமுவேல் 28:15-19 வரை சாமுவேல் பேசுவதாக இருந்தாலும் சாமுவேல் எப்படி பேசி இருப்பார். ஆவியான தன் உருவத்தில் வந்து பேசினாரா?
14 ம் வசனத்தில் கடைசியில் சவுல் சாமுவேல் என்று அறிந்து தரைமட்டும் முகம் குனிந்து வனங்கினானே, சாமுவேல் அவனுக்கு முன் தோன்றினாரா?  சவுல் குனிந்து வணங்கியது சாமுவேலின் ஆவியான தோற்றத்தை பார்த்தா அல்லது அஞ்சனம் சொல்லும் பெண்ணைப்பார்த்தா?
அஞ்சனம் சொல்லுகிற ஆவி உடையவர்கள் தங்களுக்குள் இருந்தே மற்ற ஆவிகள் பேசுவது போல் பேசுவார்கள். இப்படி இருக்க, அஞ்சனம் பார்க்கிற அந்த பெண்ணுக்குள் இருந்து சாமுவேல் பேசினாரா? அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

வந்தது சாமுவேல் தான் என்று நினைத்து சவுல் தரைமட்டும் பணிந்து நின்றானே, அப்படியானால் அந்த பெண்ணுக்குள் சாமுவேல் வந்துவிட்டார் என்று எண்ணிதானே, அந்த பெண்ணைப்பார்த்து தானே தரைமட்டும் வணங்கி இருப்பான். வேதம் இதை ஏற்றுக்கொள்ளுமா? தேவன் இதை அங்கிகரிப்பாரா?
மேலும் சவுலுக்கு தேவன் பதில் கொடுக்க விரும்பினால் தன்னிடம் வந்து சவுல் விசாரிக்கும் போதே சொல்லியிருக்கலாமே. முதலில் சவுல் தேவனிடம்தானே விசாரிக்க செல்லுகிறான். அப்பொழுது பேசாத தேவன் சாமுவேலின் ஆவிமூலமாக பேசி இருப்பாரா? அப்படி பேசி இருந்தால் ஏன் தன்னிடம் சவுல் விசாரிக்க வரும்போது அமைதியாக இருந்தார்.?
அதுமட்டும் அல்ல, அஞ்சனம் பார்க்கிற  பெண்மூலம் தன்னுடைய தீர்க்கதரிசியை பேச வைத்து, தன்னுடைய சித்தத்தை வெளிப்படுத்துவாரா? 

“அப்பொழுது அந்த ஸ்திரீ; உமக்கு நான் யாரை எழும்பிவரப் பண்ண வேண்டும் என்றதற்கு, அவன் சாமுவேலை எழும்பி வரப்பண்ணவேண்டும் என்றான்’’ ( 1சாமுவேல் 28:11).
வந்தது சாமுவேல்தான் என்று சொல்லும் நபர்கள், நன்றாக கவனிக்க வேண்டும், இந்த வசனத்தின் அடிப்படையில் யாரிடம் பேச வேண்டும் என்பதை முன்பாகவே சவுல் அஞ்சனம் பார்க்கும் பெண்ணிடம் சொல்லுகிறான்.

இதற்கு பிறகுதான் அந்த பெண்ணிற்குள் இருக்கும் வஞ்சக ஆவி தந்திரமாக செயல்பட ஆரம்பிக்கிறது. சவுல் நம்புகிறபடி நாடகம் ஒன்று நடத்த ஆரம்பிக்கிறது.
அந்த நாடகத்தை புரிந்து கொள்ளும் நிலையில் சவுல் இல்லை. சவுல் பின்மாற்றமடைந்து ஏற்கனவே பிசாசினால் வாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவன்.

முழுமையாக தேவனை விட்டு விலகிவிட்ட சவுல் எதையும் நம்ப தயாராகிவிட்டான். பின்மாற்றம் ஒருமனிதனின் ஆவிக்குறிய வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதற்கு சவுலும், இந்த சம்பவமும் உதாரணமாக இருக்கிறது.

மேலும், மரித்தோரின் ஆவிகள் இந்த பூமியில் சுற்ற முடியாது, வரவும் முடியாது என்பதைக்குறித்து தேவன் திட்டமாக வேதாகமத்தின் மூலமாக பேசுகிறார்.

மரித்த ஆவிகளைப்போல் பிசாசின் ஆவிகளே வஞ்சிக்கும்படியாக செயல்படுகிறது. அவைகளே மரித்த நபர்களின் பெயரைச்சொல்லி உலாவருகிறது.

இந்த செயல்கள் பிசாசின் மூலமாக இருப்பதால் தேவன் இதைக்குறித்து கடுமையான கண்டனத்தை எழுதிக்கொடுத்திருக்கிறார் லேவி 19;31, 20:6, 20:27, உபா 18:11.  ஆகவே இது போன்ற வேத வசனங்களை வைத்து நாம் அறிந்துகொள்ளமுடியும். தெளிவு பெற முடியும்.

மேலும் மரித்தவர்களின் ஆவியைக் கொண்டுவந்து பேசுகிறேன் என்று சொல்லும் நபர்களிடம் செல்லுவதையும், அவர்கள் செய்கிற காரியங்களில் ஈடுபடுவதைக்குறித்து வேதம் கடுமையாக எச்சரிப்பதும், அதைப் பாவமாக கருதி தடையும் செய்கிறது.
    
வேதம் இவ்விதமாக சொல்லியிருக்க அதை ஒரு சம்பவத்தில் மட்டும் தேவன் எப்படி மாற்றுவார்.
மரித்த சாமுவேலை  சவுல் அஞ்சனம் பார்க்கும் பெண் மூலமாக எழும்பிவர செய்ய,  உண்மையில் சாமுவேலின் ஆவிதான் வந்து பேசியது என்றால் இந்த சம்பவத்தின் மூலம் தேவன் தமது மக்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி என்னவாக இருக்கும்,  அஞ்சனம் பார்க்கிறதை ஆதரிக்கிறேன். நீங்களும் அதை செய்யலாம், என்றா?  அல்லது சவுலின் அழிவை உணர்த்தமட்டும் அஞ்சனம் பார்க்கும் பெண்ணை பயன்படுத்தினேன் இனி அதை நீங்கள் யாரும் எடுத்துக்கொள்ளாதீர்கள் என்றா? எப்படி எடுத்துக்கொள்ளலாம்.
வேதாகமத்தை வாசிக்கும் போது முன்னும் பின்னும், சரியாக வாசிக்க வேண்டும்,

இந்த சம்பவத்தின் மூலம் தேவன் திட்டமாகப் பேச விரும்புகிற விஷயம் என்ன வென்றால், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு, தேவனால் அழைக்கப்பட்ட ஒரு மனிதன், தேவ சித்தத்தை மீறி செல்லும் போது, அவன் எந்த அளவுக்கு பிசாசினால் வஞ்சிக்கப்படுகிறான் என்பதை வெளிப்படுத்தவும், அவன் தான் பின்பற்றிவந்த எல்லாவற்றையும் எப்படி எளிதில் விட்டுவிடுவதற்கு தயாராகிவிட்டான் என்பதையும் விளக்குவதற்காகவே இந்த சம்பவம் வேதாகமத்தில் விரிவாக விளக்கி சொல்லப்பட்டுள்ளதே தவிர, சாமுவேலே வந்து சவுலிடம் பேசினார் என்பதாக அல்ல,

இந்த அதிகாரத்தில் சவுலின் யூகத்தின் அடிப்படையிலும், அவன் எவ்வாறு அதை எடுத்துக்கொண்டான் அதை புரிந்துகொண்டான் என்பதை அவனின் மனநிலையின் படியே வேதாகமத்தில்  எழுதப்பட்டுள்ளதே தவிர உண்மையில் வந்தது சாமுவேலின் ஆவி அல்ல.
அஞ்சனம் பார்க்கும் பெண்ணின் மூலம், வஞ்சிக்கிற பிசாசின் ஆவியே சவுலிடம் சாமுவேலின் ஆவியைப்போல பேசியது. அதை சவுலும் நம்பி, சாமுவேலின் ஆவி என நினைத்து, சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்து கொண்டான்.
சவுல் பிசாசை பணிந்து கொள்ள வேண்டும் என்பதே பிசாசின் வாஞ்சை, அதுவே அந்த சம்பவத்தின்மூலம் நடக்கிறது. பின்மாற்றமடைந்த சவுலும் நடப்பது நாடகம் என்பதை அறியாமல் ஆவிக்குறிய கண் மறைக்கப்பட்டவனாக அதற்கு இசைந்து செல்கிறான்.
எனவே தேவனை அறிந்த தேவனுடைய பிள்ளைகள் தேவ சித்தத்தை மீறி, சுய சித்தம் செய்து, தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், மனந்திரும்பாமல் இருக்கும் போது, பிசாசின் எல்லா தந்திரங்களை அறிந்து கொள்ளமுடியாமல், தனக்கு எதிரே இருப்பது என்ன என்பதைத் தெளிவாக புரிந்து கொள்ள முடியாமல், சத்தியத்தை போல பேசும் வஞ்சிக்கிற ஆவிகளுக்கு,  இரையான சவுலைப்போல தங்களின் ஆவிக்குறிய வாழ்க்கையை இழக்க நேரிடும், அப்படிப்பட்டவர்களுக்கு சவுலின் முடிவுதான் என்பதை வேதம் திட்டமாக விளக்கி காண்பிக்கிறது.



6 comments:

  1. "வந்தது சாமுவேல் தான்" என்று, மறைந்த தேவ ஊழியர் D.G.S.தினகரன் அவர்கள் தன்னுடைய "என் பரலோக தரிசனங்கள்" என்ற நூலில் குறிப்பிட்டு இதைக் கர்த்தரிடத்தில் கேட்டு உறுதி செய்ததாக சொல்லியுள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா, அந்த தரிசனத்தை குறித்து எனக்கு தெரியாது, வேதாகமத்தை ஆராய்ந்தால் இதுதான் பதிலாக கிடைக்கிறது.

      Delete
  2. Thanks PAstor indha doubt romba naalahave enakku irundhathu. Vandhathu samuel endraal andavar anjanam parkirathai aatharipathu pol irukirathe. endru yosipen. Ur answer is something good.

    ReplyDelete
    Replies
    1. நல்லது சிஸ்டர். Nithya Lakshmi உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.....

      Delete
  3. welcome paster good argument but i believe that God had admitted first second the future belongs to only HIM it is stranger peculiar one

    ReplyDelete
  4. Deva Manusanaaga vaalntha Samuuvel marithu devanodo irukkum paichchathil, oru pisasu aavi kuppitto vara vidovaara, example Deva manusan moses maritha sadalathai pisasukku koadokkatha devan(sariram mannukku poagum athaiyea tharavillai) appadiyaanal devanudaiya madiyl irukkum samuvel aaviyai yeappadi anuppuvaaar.

    pastor one most instering line : உண்மையில் சாமுவேலின் ஆவிதான் வந்து பேசியது என்றால் இந்த சம்பவத்தின் மூலம் தேவன் தமது மக்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி என்னவாக இருக்கும், அஞ்சனம் பார்க்கிறதை ஆதரிக்கிறேன். நீங்களும் அதை செய்யலாம், என்றா?

    ReplyDelete