Bread of Life Church India

லாபமா? நஷ்டமா?

“எனக்கு லாபமாயிருந்தவை களெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்’’ (பிலிப்பியர் 3:7).

மனிதர்கள் எப்போதும் வருமானத்தில் மட்டும்தான் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கிறவர்கள் மிகவும் குறைவு.

என்ன செய்தால் லாபம் ஈட்டலாம். எப்படிச் சம்பாதிக்கலாம் என்பதுதான் நாள் முழுவதும் மனிதனின் எண்ணங்கள், செயல்கள். ஆனால் இவைகளை எல்லாம் தாண்டி உண்மையான லாபம் மனிதனுக்கு எது என்றால் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதே.


கிறிஸ்து இல்லாமல் மனிதர்கள் ஈட்டுகின்ற எல்லாமும் நஷ்டம்தான் என்பதைதான் மேலே உள்ள வசனம் நமக்கு விளக்குகிறது. “கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதற்காக முன்பொரு காலத்தில் எனக்கு லாபமாகத் தோன்றின எல்லாவற்றையும் நஷ்டமாக எண்ணி தூக்கி எறியத்தயாராக இருக்கிறேன்.

ஏன் என்றால் இந்த உலகத்தில் நான் எதை ஆதாயப்படுத்தினாலும், கிறிஸ்துவை ஆதாயப்படுத்தாமல் விட்டு விட்டால் நான் மிகுந்த நஷ்டம் அடைந்தவனாகவே இருப்பேன்’’ என்பதை நன்றாக அறிந்த பவுல் அப்போஸ்தலர் இவ்விதமாக எழுதுகிறார்.

இயேசு கிறிஸ்துவும் இதே வார்த்தைகளையே பயன்படுத்துகிறார்.”மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மாற்கு 8: 36,37).
மனிதர் இந்தப் பூமியில் சேர்ப்பவைகள் எல்லாம் இந்தப் பூமியில் வாழும்வரை சரீர வாழ்வுக்கு லாபம், ஆனால் கிறிஸ்தவை ஆதாயப்படுத்திக்கொள்வதுதான் உண்மையான லாபம். கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளாமல் இந்த உலகம் முழுவதையும் தனக்குச் சொந்தமாக மாற்றிக்கொண்டாலும் அது ஜீவனுக்கு நஷ்டமே.

ஒரு மனிதன் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் அவனில் இருக்கும் சுயம் சாக வேண்டும், சுயம் செத்தால்தான் இந்த மேன்மைகள் விளங்கும், இல்லை என்றால் உலகத்தில் உள்ளவைகள் மட்டுமே மேன்மையாகத் தோன்றும்.

சுயம் ஒரு போதும் ஒரு மனிதனை தேவ சித்தம் செய்ய விடுவதே இல்லை. சுயம் அழிக்கப்படும் போதே தேவ சித்தம் செய்ய மனம் விரும்புகிறது. இல்லை என்றால் தான் செய்வது எல்லாம் மிகவும் சரி என்பது தான் மனிதனின் எண்ணமாக இருக்கும்.

சுயம் எப்போதும் தேவ ராஜ்யத்திற்கு எதிராகவே இருக்கும். மனித ராஜ்யம் வேறு, தேவ ராஜ்யம் வேறு. மனித ராஜ்யம் அழிவுக்குரியது. தேவ ராஜ்யம் நித்தியமானது. சுயம் அழிவுக்குரியவைகளை மட்டுமே முன்பாக வைக்கும், அதையே விரும்பும்.

சுயம் அழிக்கப்படும் போதே, தேவ சித்தம் செயல்பட ஆரம்பிக்கிறது.
“கர்த்தருக்காக நான் எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறேன். கர்த்தருக்காக என்னை முழுவதுமாக அர்ப்பணிக்கிறேன். கர்த்தருக்காக எல்லாவற்றையும் நான் இழக்க தயாராக இருக்கிறேன்’’. என்றெல்லாம் சிலர் பேசுவதைக் கேட்கலாம். “இங்கே கர்த்தருக்காக என்ற வார்த்தையை எவ்விதமான அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிய வில்லை.

ஆனால் அந்த வார்த்தைக்குச் சரியான அர்த்தம் என்ன வென்றால் “நான் கர்த்தரை ஆதாயப்படுத்திக்கொள்ள, அதாவது கர்த்தருக்குப் பிரியமாக வாழ என்னை அர்ப்பணிக்கிறேன்.. பரலோக ராஜ்யத்தை ஆதாயப்படுத்திக்கொள்வதற்காக எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறேன். தேவனோடு என்றென்றும் நித்திய நித்திய காலமாக வாழ எல்லாவற்றையும இழக்க தயாராக இருக்கிறேன் . என்பதுதான் பொருள்

இதைத்தான் பவுல் அப்போஸ்தலனும் சொல்லுகிறார். “நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,

இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,
அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்’’ (பிலிப்பியர் 3:9-11)

கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்கு முன்பாக எவைகள் எல்லாம் மேன்மையாகத் தெரிந்ததோ, அவைகள் எல்லாம் குப்பையாகத் தெரிகிறது காரணம் என்னவென்றால் கிறிஸ்துவின் நீதி, கிறிஸ்துவை அறிகிற அறிவு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமை, உயித்தெழுவதற்குத் தகுதி அடைதல் இவைகள் எல்லாம் மேன்மையாகத் தெரிந்த உடன் மற்றவைகள் குப்பையாகத் தெரிய ஆரம்பிக்கிறது. இவைகள் சுயம் அழிக்கப்பட்டால் மட்டுமே நடக்கும். இல்லை என்றால் இவைகளின் மேன்மைகளை அறிந்து கொள்ளமுடியாதபடி சுயம் கண்களை மூடிவிடும்.

தேவனுடைய கரங்களில் முழுமையாக அர்ப்பணித்துச் சுயம் வெளிப்படாமல், தேவனுடைய சித்தம் தன்னில் நடக்கும்படி முழுமையாகத் தன்னைத் தேவனுடைய கரங்களில் கொடுப்பவர்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாகத் தேவனால் ஆசீர்வதிக்கப்படவும் தேவனால் பயன்படுத்தப்படவும் முடியும்.

தொடர்ந்து சுயத்தில் மையம் கொண்டிருக்கிறவர்களை, கர்த்தரால் ஆசீர்வதிக்கவும் முடியாது, உயர்த்தவும் முடியாது. அப்படிப்பட்டவர்கள் கர்த்தருடைய அற்புதங்களைப் பார்க்கலாம் பெற்றுக்கொள்ள முடியாது.
சுயம், தேவ சித்தத்தைச் செய்ய மறுக்கிறது. சுயம் எப்போது களையப்படுகிறதோ, அப்பொழுதே தேவ சித்தத்தைச் செயல்படுத்த ஆரம்பிக்கிறது.

சுய பலம் தேவ ராஜ்யத்தை என்றும் கட்டுவதே இல்லை. சுய பலம் சுய இராஜ்யத்தையே கட்டி எழுப்பும்.

தேவன் நம்முடைய கரங்களில் கொடுத்திருக்கும் பொறுப்புக்கள் சுய ராஜ்யத்தைக் கட்டுவதற்காக அல்ல, தேவனுடைய இராஜ்யத்தைக் கட்டுவதற்காகவே என்பதை மறந்து விடக்கூடாது.

எந்த ஒன்றிற்கும் மற்றவர்களையே குற்றப்படுத்திக்கொண்டிருக்கும் மனிதன் தனக்கும் பயன்பட மாட்டான், மற்றவர்களுக்கும் பயன் பட மாட்டான், கர்த்தருக்கும் பயன்பட மாட்டான். அப்படிப்பட்ட மனிதர்களைக்கொண்டு தேவன் எதையுமே செய்வதும் இல்லை. செய்யவும் முடியாது.

தன்னுடைய தவறுகளை உணர்ந்து, தேவ சமூகத்தில் தன்னைக் கொடுத்து வேண்டாதவைகளை விட்டு விட்டு, தேவனுக்காக எழும்புகிறவர்களையே தேவன் தேடுகிறார், அழைக்கிறார் பயன்படுத்து கிறார்.

கர்த்தர் நலமானதையும், பொல்லாத தையும் வேறு பிரிக்கவே விரும்புகிறார். வேறுபிரிக்கப்படாத வாழ்க்கை மாறுபாடான வாழ்க்கையாகவே இருக்கும், கலப்படமான வாழ்க்கை தேவனுக்கு எதிராகவே இருக்கிறது.

தவறுகள் வாழ்க்கையில் நடக்கும் போது அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும், ஒரு முறை செய்த தவறு மறு முறை வாழ்க்கையில் வரக்கூடாது. ஒருவேளை மறுபடியும் வருகிறதென்றால் ஒன்று பாடம் கற்றுக்கொள்ள வில்லை. அல்லது அதைத் திருத்திக்கொள்ள மனம் இல்லை என்பதே பொருள்.

தவறை உணராதவரும், அந்தத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறை திருத்திக்கொள்ளாதவரும் ஒன்றே,

அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை பரிதாபமான வாழ்க்கையாகவே இருக்கும். ஏன் என்றால் உணர்த்தப்பட்டும், உணர்வடைய வில்லை. உணர்வடையாதோர் தேவ ராஜ்யத்திற்கு விலக்கமாவே இருக்கின்றனர்.

சுயத்தில் மையம் கொண்டிருப்போர் எப்போதும் மற்றவர்களையே குற்றப்படுத்திக்கொண்டிருப்பர். தேவ நீதி செய்ய ஒப்படைத்தவரே, தன்னைத் தானே உணர்ந்து தனது குற்றங்களை நியாயம் தீர்க்க தாயாராகிறார்.
அனுதினமும் தன்னைத்தானே நியாயம் தீர்த்து, தனது குற்றத்தைக் கழைந்து தேவ நீதி செய்து தேவனுக்குப் பிரியமாக வாழ ஒப்புக்கொடுப்பவரே, ஆவியானவரால் நடத்தப்படுகிறார்.

தேவ ஆவியானவாரால் நடத்தப்படுகிறவர்களின் வாழ்வில் மட்டுமே, நிறைவான மகிழ்ச்சியும் சமாதானமும் உண்டாயிருக்கும்.

இந்த நாட்களிலும் இயேசு கிறிஸ்துவையும் அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையையும் அறிந்து, இதை மேன்மையாக வைத்து, மற்றவைகளைக் குப்பையாகத் தூக்கி எறிவதே உண்மையான ஆதாயமாக இருக்கும்.

எனவே கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதற்காக, அதாவது கிறிஸ்துவின் சாயலாக மாறுவதற்கு, இந்த உலகத்தில் இருந்து வருகிற எல்லாவற்றையும் உதறித்தள்ளி, தேவ சித்தம் செய்வோம் கர்த்தர் நம்மை வழி நடத்துவாராக.



1 comments:

  1. தேவகிருபையால் பரிசுத்த ஆவியானவரால் தொடப்படுட்டு சுயத்தை வெறுத்து வாழ ஆண்டவரே என்னை தாழ்த்தி உமது பாதபடியில் ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.

    ReplyDelete