Bread of Life Church India

இதுவே அடையாளம்

 ஆடு மேய்க்கிறவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நற்செய்தியை அறிவித்து தேவ தூதன்.``பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்'' <லூக்கா 2:12>.
    இயேசு கிறிஸ்து பிறந்திருக்கிறார் என்பதற்கு ஆடு மேய்ப்பவர்களுக்கு அடையாளம் கொடுக்கப்பட்டது. அவர் எந்த ஊரிலே, எந்த இடத்திலே எப்படி இருக்கிறார் என்பதும் அவர்களுக்கு துல்ஙியமாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே வந்த செய்தி மனித குலத்திற்கே நல்ல செய்தி.
இந்த நல்ல செய்தியை கேட்பது மட்டும் அல்ல, வாழ்க்கையில் எல்லோரும்  பெற்றுக் கொள்ளவேண்டும். இதை எல்லா மனிதருக்கும் அறிவிக்க வேண்டும். என்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.

     உலக வரலாற்றில் நல்ல செய்தியாக இருப்பது சர்வ வல்லமை உள்ள தேவன் மனிதர்களைத் தேடி பூமிக்கு வந்ததுதான். இந்த செய்தி `எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி <லூக்கா 2:10>.
நம்மைதேடி இந்த பூமிக்கு வந்த தேவாதி தேவனின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடையும் நாம் அவர் இந்த பூமிக்கு வந்த நோக்கத்தையும் நன்றாக புரிந்து கொண்டாடும் போது நாம் மட்டும் அல்ல, அவரும் நம்மோடு சேர்ந்து மகிழ்ச்சி அடைவார்.
    அதுவே தேவனுடைய விருப்பமுமாக இருக்கிறது. எனவே கிறிஸ்து பிறப்பை குடும்பத்துடன், உறவினர்களுடன், சபையாக இணைந்து கொண்டாடி மகிழும் என் அன்பு தேவ மக்களே, இன்னும் அநேகருடைய உள்ளத்தில் இயேசு கிறிஸ்து பிறக்கவில்லை, இயேசு கிறிஸ்து பிறக்காத உள்ளம் இருள் நிறைந்த உள்ளமாக இருக்கிறது. இருள் அடைந்திருக்கும் உள்ளங்களில் இயேசு கிறிஸ்து பிறந்தால் மட்டுமே வெளிச்சம் உதிக்கும். எனவே இயேசு கிறிஸ்து இன்னும் அநேகருடைய உள்ளங்களிலும், இல்லங்களிலும் பிறக்க வேண்டுமே என்ற உள்ளான பாரத்துடன், நாம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நன்நாளை நினைவு கூர்ந்து கொண்டாட வேண்டும். அதாவது சுவிசேஷத்தை அறிவிக்க நாம் தீவிரப்பட வேண்டும்.
     இதுவே கிறிஸ்து நமக்குள் பிறந்திருக்கிறார் என்பதற்கு ஒரு அடையாளமாக இருக்கிறது. ஏன் என்றால்  ``பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்'' <லூக்கா 2:10> என்று மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த சுவிசேஷம் இன்றும் உலகம் முழுவதிலும் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் அறிவிக்கப்படவேண்டும்.
கேட்டு, சென்றார்கள்
     ``மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்'' <லூக்கா 2:15,16>.
தங்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்தியை கேட்ட மேய்ப்பர்கள் தாமதம் இல்லாமல் உடனடியாக இயேசு கிறிஸ்துவை காண சென்றார்கள் என்று பார்க்கிறோம்.
          இன்றும் அநேகர் நல்ல செய்தியை கேட்க விரும்புகிறார்கள். ஆனால் அந்த செய்தியை தங்கள் வாழ்வில் பெற்றுக்கொள்ள தாமதம் பண்ணுகிறார்கள்.
    தாமதம், வருகிற நன்மைகளை தாமதம் பண்ணிக்கொண்டிருக்கும். உங்களுக்கு அறிவிக்கப்படும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை கேட்டு எந்த அளவுக்கு வேகமாக இயேசு கிறிஸ்துவினிடத்தில் வருகிறீர்களோ, அந்த அளவு வேகத்துடன் உங்களுக்கு வருகிற ஆசீர்வாதமும், நன்மையும் தேடி வரும்.
    எனவே, எனக்கன்பானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நல்ல செய்தியை கேட்டு உடனடியாக இயேசு கிறிஸ்துவினிடத்தில் சென்ற மேய்ப்பர்களைப்போல, நீங்களும் உடனடியாக இயேசு கிறிஸ்துவினிடத்தில் வாருங்கள்.
   இந்த வருட கிறிஸ்து பிறப்பின் நன்நாளை நினைவு கூர்ந்து கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் கிறிஸ்து இயேசு உங்கள் இருதயத்திலும்  உங்கள் குடும்பத்திலும் பிறக்கட்டும்.
      இயேசு கிறிஸ்து உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்கும் போது உங்கள் வாழ்வில் இதுவரை இருந்த எல்லா இருளின் ஆதிக்கங்களும் அகன்று போகும், மகிழ்ச்சியும் சமாதானமும் உண்டாகும்.
     ``இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது <ஏசாயா 9:2> என்ற தேவனுடைய வார்த்தைகள் உங்கள் வாழ்விலும் நிறைவேறும்.
          உங்களுக்கு அறிவிக்கப்படுகிற இந்த நற்செய்தியை கேட்டு இன்றே நீங்கள் இயேசு கிறிஸ்துவிடம் வரும் பொழுது உங்களுக்குள்ளாக இயேசு கிறிஸ்து பிறக்கிறார். அப்பொழுது ஒவ்வொரு நாளும் உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் மகிழ்ச்சியின் கொண்டாட்டம்தான்.
கண்டு, அறிவித்தார்கள்.
     ``தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள்'' <லூக்கா 10:16,17>.
          தேவ தூதன் மூலமாக அறிவிக்கப்பட்ட நற்செய்தியை கேட்ட மேய்ப்பர்கள் தீவிரமாக காண சென்றார்கள் என்றும் தாங்கள் கேட்ட, கண்ட நற்செய்தியை தாமதம் இல்லாமல் பிரசித்தம் <அறிவித்தல்> பண்ணினார்கள் என்றும் வேதம் சொல்லுகிறது.
              நாமும் நமக்கு கிடைத்த நற்செய்தியை மற்றவர்களுக்கும் அறிவிப்பதே இயேசு கிறிஸ்து நமக்குள் இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கும்.
நமக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தியைக் குறித்து நாம் எந்த அளவுக்கு கரிசனை உள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
நமக்கு கிடைத்த இந்த நற்செய்தியை நாம் எந்த விதத்தில் கொண்டாடுகிறோம்?
       இந்த நற்செய்தியானது மகிழ்ந்து எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்பட வேண்டிய செய்தி.
         எனவே இந்த கிறிஸ்து பிறப்பு நன்நாளை நினைவு கூர்ந்து மகிழும் அன்பு தேவனுடைய பிள்ளைகளே இந்த நல்ல செய்தியை மற்றவர்களுக்கும் அறிவிக்க தீவிரப்படுங்கள்.
     கிறிஸ்து உங்களுக்குள் பிறந்திருப்பதை பிரசித்தம் பண்ணி, இன்னும் அநேகருடைய உள்ளங்களில் பிறக்க செயல்பட வேண்டும்.
அன்றைக்கு மேய்ப்பர்கள் அதைத்தான் செய்தார்கள். தங்களுக்காக பிறந்த இயேசுவை கண்டு, மகிழ்ந்து அதை மற்றவர்களுக்கும் அறிவித்தார்கள்.
அறிவிக்கும் போதுதான் உண்மையான மகிழ்ச்சி நமக்குள் உண்டாகிறது.
தனக்கு கிடைத்த நற்பொருளை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளும்போதுதான் உண்மையான மனமகிழ்ச்சியும் சமாதானமும் உண்டாகும்.
           இன்றைக்கும் தங்கள் வாழ்வில் நிம்மதி இல்லாமல், வேதனையுடனும், கண்ணீருடனும், இருக்கும் மக்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
மனிதர்களின் வாழ்க்கையில் நிம்மதியும், சமாதானமும் சந்தோஷமும், நோய் நொடி இல்லாத வாழ்வும் மிகவும் அவசியம். ஆனால் இன்றைக்கு மனிதர்களின் நிலை என்ன?
         எல்லா மனிதர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் இவைகள் மனிதர்களுக்கு கிடைக்காமல் விலகிப்போகிறதற்கு காரணம் என்ன? பாவம், பாவத்தினால் உண்டாகும் சாபம். இது மனிதர்களின் நிம்மதியைக் கெடுத்து, வாழ்நாளை குறைத்து, மனிதர்களை செயல் இழக்க செய்து விடுகிறது.
      கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவங்களை கேள்விப்பட்டேன். வசதி வாய்ப்பில் குறை இல்லாத, சொத்து பத்தில் குறை இல்லாத அரசியஙிலும் செல்வாக்காக, வாழ்ந்து வந்த ஒரு நபரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்  மனதை மிகவும் பாதிக்க செய்தது.  இந்த வருடத்தில்   ஆறு மாத காலத்திற்குள்ளாக அந்த குடும்பத்தில் உள்ள நான்கு பேர் மரணத்தை சந்தித்திருக்கிறார்கள்.
    முதலாவது மனைவியை இழந்த அந்த நபர், இரண்டு மாத கால இடைவெளியில் தனது டாக்டர் மகனை விபத்தில் இழந்தார்.
அடுத்த இரண்டு மாத காலத்தில் குடி போதைக்கு அடிமையாகி இருந்த  தனது மூத்த மகனை இழந்தார். அடுத்த 15 நாளில் தானும் மரித்துப்போனார். 
இந்த பூமியில் வாழ்வதற்கு எந்த குறையும் இல்லை. சொத்து சேர்ப்பதிலும், பணம் சேர்ப்பதிலும் வெற்றி கண்ட அந்த குடும்பத்தினர், உண்மையான வாழ்க்கையில் தோற்று போய் விட்டார்கள்.
         இப்போது அவர்கள் சேர்த்த பணம் சொத்துக்கள் இருக்கிறது. ஆனால் அதை அனுபவிப்பதற்கு அவர்கள் இல்லை.
பணத்தை முக்கியத்துவப் படுத்தினார்கள், பதவி, அதிகாரத்தை முக்கியத்துவப்படுத்தினார்கள். ஆனால் தங்கள் ஆத்தும விடுதலைக்காகவும், ஆத்மீக வாழ்வு செழிப்படைய வேண்டுமே என்றும் அறிந்து கொள்ளாமல், இதை முக்கியத்துவப்படுத்தாமல் விட்டு விட்டார்கள்.
         இப்படியாகத்தான்  அநேக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள், இதற்கெல்லாம் காரணம் என்ன? பாவம், அதனால் உண்டான சாபம். எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனின் பாவத்திஙிருந்து விடுவிக்கவும், சாபத்திஙிருந்து விடுவிக்கவும் மனிதர்களை வாழ வைக்கவுமே இந்த பூமியில் பிறந்தார்.
      ஆனால் அதை இன்னும் அறிந்து, ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் மனிதர்கள், இப்படியாக கொள்ளை போகிறார்கள். இந்த பூமிக்குரிய வாழ்வு முடிந்ததோடு எல்லாம் முடிந்து விட்டதா? இல்லையே, பாவத்தோடு, சாபத்தோடு மரிக்கும் மனிதனின் நிலை என்ன? நித்திய நித்திய காலமாக நரகத்தில் வேதனைப்பட வேண்டுமே.
இந்த பூமியில் தங்கள் வாழ்நாளைக்கெடுத்துக்கொண்ட மனிதனின் நிலை நித்தியத்திலும் தொடருமே.
     ஆகையால்தான் பிரியமானவர்களே, மனிதர்களை பாவத்திஙிருந்தும், சாபத்திஙிருந்தும் விடுவிக்கும் படியாக இயேசு கிறிஸ்து இந்த பூமியில் எல்லா மனிதர்களுக்காகவும் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்க வேண்டியது நமது கடமையாக இருக்கிறது. ``அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்'' <லூக்கா 1:21> என்று பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக்கிறித்து நமக்கு அறிவிக்கிறது.
      பிரியமானவர்களே, நாம் மகிழ்ச்சியுடன் கிறிஸ்து பிறப்பை நினைவு கூர்ந்து  கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அப்படிப்பட்ட மனிதர்களையும் நாம் நினைவு கூற வேண்டும்.
    அப்படிப்பட்டவர்களின் ஆத்தும இரட்சிப்பிற்காகவும் பிறந்த சர்வ வல்லமையுள்ள தேவாதி தேவன் இயேசு கிறிஸ்து பூமியில் பிறந்ததின் நோக்கத்தை அறிவிக்க வேண்டும்.
இதைத்தான் பிறந்த கிறிஸ்துவை கண்ட மேய்ப்பர்கள் செய்து இயேசு கிறிஸ்து பிறப்பின் நன்நாளைக் கொண்டாடினார்கள்.
துதித்து மகிமைப்படுத்தினார்கள்
        பிறந்த கிறிஸ்துவைக் கண்டு, அறிவித்த மேய்ப்பர்கள். துதித்து தேவனை மகிமைப்படுத்தினார்கள். ``மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு, கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள் <லூக்கா 2:20>.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக்குறித்து தேவ தூதர்களும் திரள் சேனையாக கூடி ``உன்னதத்தில் இருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்ஙி, தேவனைத் துதித்தார்கள் <லூக்கா 2:14> என்று வேதம் கூறுகிறது.
நாமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் துதிக்க வேண்டும். அவருடைய நாமம் மகிமைப்படும் படி வாழ வேண்டும். நாம் தேவனைத்துதிக்கும் போது தேவன் மகிமை அடைகிறார்.
அதை விட அவருக்குப் பிரியமாக நாம் வாழும் பொழுதே உண்மையாக நாம் தேவனுக்கு மகிமையை கொடுக்கிறோம்.
        இந்த பூமியில் பிதாவாகிய தேவனின் சித்தத்தின்படி இந்த பூமிக்கு வந்த குமாரனாகிய தேவன். எப்படி எல்லாம் தன்னுடைய செயல்களின் மூலமாக, தனது நடக்கையின் மூலமாக தேவனுக்கு மகிமையை கொடுத்தாரோ, அதே போலதான் கிறிஸ்து பிறப்பின் நாளை நினைவு கூர்ந்து கொண்டாடும் நாமும் எந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் மூலமாக, செயஙின் மூலமாக, நடக்கையின் மூலமாக, பேச்சின் மூலமாக தேவனுக்கு மகிமையை செல்லுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
கிறிஸ்து பிறப்பு நாளை நினைவு கூர்ந்து கொண்டாடி மகிழும் நாம் வெறுமையாக புதிய உடை அணிந்து, கேக் வெட்டி, நல்ல உணவு வகைகளை சமைத்து உண்டு, மற்றவர்களுக்கு கொடுப்பது மட்டும் அல்ல, நாம் கொண்டாடும் உண்மையான கிறிஸ்து பிறப்பு.
          முதலாவது கிறிஸ்துவை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும், அடுத்தது நம்முடைய வாழ்க்கையை மாற்றும்படி இந்த பூமியில் பிறந்து இயேசு கிறிஸ்து என் உள்ளத்தில் பிறந்ததின் விளைவாக என்னுடைய வாழ்க்கை எந்த அளவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
நான் தேவன் மகிமைப்படும்படி, தேவனுக்கு உண்மையாக, பிரியமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேனா? இன்னும் என்னுடைய வாழ்க்கை கிறிஸ்துவுக்குள்ளாக எந்த அளவுக்கு கட்டி எழுப்பப்பட வேண்டும் என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, தேவன் விரும்பும் வாழ்க்கையை வாழும் போது நாம் நமது வாழ்க்கையின் மூலமாகவும் தேவனுக்கு மகிமை செலுத்துகிறோம்.
           எப்படி எனில் நாம் வாழும் வாழ்க்கை மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக மாறிவிடுகிறது. மற்றவர்கள் நம்மைப்பார்க்கும் போது, இவர்கள் கிறிஸ்துவை உடையவர்களாக இருக்கிறபடியால்தான் இவ்விதமாக நல்ல முறைமைகளில் வாழ்கிறார்கள் என்று சொல்லும் போது, தேவன் மகிமை அடைகிறார். இதுவே தேவனுக்கு மகிமையை கொண்டு செல்லும், தேவன் மகிமை அடைவார்.     இதுவே நாம் கிறிஸ்து பிறப்பின் நாளை நினைவு கூர்ந்து கொண்டாடும் உண்மையான கொண்டாட்டமாக இருக்கும்.  

கிறிஸ்து பிறப்பின் நாளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி கொள்ளும் இந்த மாதத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குள் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறாரா? என்பதை நாம் பரிசோதித்துப் பார்ப்பது கிறிஸ்து நமக்குள் வளரவும் நாம் கிறிஸ்துவுக்குள் நிலைத்து நிற்கவும் நமக்கு உறுதுணையாக இருக்கும்.

0 comments:

Post a Comment