Bread of Life Church India

பொருளாதாரா உயர்வா? தேவ அங்கீகாரமா?

தற்காலத்தில் இரண்டு விதமான கிறிஸ்தவ விசுவாசிகளை காணலாம்.
    1) உலகப் பொருட்களின் அடிப்படையில் தேவ ஆசீர்வாதத்தை தேடுபவர்கள். 2) தெய்வ பக்தியின் அடிப்படையில் தேவ அங்கீகாரத்தை வாஞ்சித்துத் தேடுபவர்கள்.      இவ் விருசாராருக்கும் இடையில்தான் எத்தனை பெருத்த வித்தியாசம்! ஏராளமான இன்றைய விசுவாசிகள், தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதில், அதிலும் பிரதானமாய் உலகப் பொருட்களினால் ஆசீர்வதிக்கப்படுவதில் மாத்திரமே திருப்தி கொண்டுவிட்டார்கள்.

    சில வளர்ந்த, முதிர்ந்த வயதுடைய தலைவர்களும்,விசுவாசிகளும் கூட பேசும் பொழுது ``கிறிஸ்துவுக்குள் ஆரம்ப நாட்களில் நான் மிகுந்த கஷ்ட நிலையில் இருந்தேன். ஆனால், இப்பொழுதோ எனக்கு மிகுந்த செல்வ செழிப்பு இருக்கிறது. நான் மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கிறேன்'' என்று சொல்லுகிறார்கள்.
    கிறிஸ்துவுக்குள் வளர்ச்சியும், ஆசீர்வாதமும் பொருளாதார நன்மை மட்டுமே, என்று நினைத்துக் கொள்கிறார்கள்.  சரீர_பொருளாதார சுக வாழ்வு! சொகுசு வாழ்க்கை! செல்வசெழிப்பு! இவை என்ன? இவை அனைத்தும் சுயத்தை மையமாகக் கொண்டு வாழும் ஓர் வாழ்க்கை! என்பதை மறந்து விடுகின்றனர். அல்லது மறுத்து விடுகின்றனர்.
    ஆனால் தேவனுடைய வார்த்தையோ, நாம் நமக்காக ஜீவிக்காமல் அவருக்காக ஜீவிக்க வேண்டும் என்பதற்காகவே இயேசு மரித்தார் என்றல்லவா கூறுகிறது (2 கொரிந்தியர் 5:15). அதாவது நம்மை நாமே பிரியப்படுத்தி ஜீவிப்பது அல்ல, தேவனை மாத்திரமே பிரியப்படுத்தி ஜீவிக்கும் ஓர் ஜீவியம்!
                      செல்வ செழிப்போடு இருப்பவர்கள் மட்டுமே தேவ ஆசீர்வாதம் பெற்றவர்களென்றால் கிறிஸ்தவ விசுவாசிகளை விட உலக மக்கள் தான்  செல்வ செழிப்போடு இருக்கிறார்கள், தேவன் நீதியுள்ளோர் மீதும் அநீதியுள்ளோர் மீதும் ஒரே சமமாகவே தன் சூரியனை உதிக்கப் பண்ணுகின்றார் <மத்தேயு 5:45> என இயேசு கூறினார். எனவே பொருளாதார ஆசீர்வாதங்கள், மட்டும் தேவன் ஒரு மனிதனின் வாழ்க்கையை அங்கீகரித்தற்கு அடையாளமே கிடையாது.   
   
    வேதாகமத்தில் யாக்கோபைக்குறித்து பார்க்கும்பொழுது. ``இவ்விதமாய் அந்த புருஷன் மிகவும் விருத்தி அடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனாய். (ஆதி 30:31) இருந்தான்.  ``அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றி, தான் பதான் அராமில் சம்பாதித்த மிருக ஜீவன்களாகிய அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான்தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்துக்குப் போகப் புறப்பட்டான்'' (ஆதி 31:17,18). இரண்டு பரிவாரங்கள் உடையவனாக இருக்கும் யாக்கோபு, கானானை நோக்கி பயணிக்கும் வேளையில் யாப்போக்கு என்ற ஆற்றின் துறையை கடந்து போகும்பொழுது, இரவு முழுவதும் தேவனோடு போராடி ``நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான் ஆதி 32:26>. இங்கே மிகுந்த ஆஸ்தியுடையவனாக இரண்டு பரிவாரங்களோடு பயணிக்கும் யாக்கோபு தேவனிடத்தில் கேட்கும் ஆசீர்வாதம் என்ன? என்பதை குறித்து சற்று நிதானமாக தியானித்து பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால், இன்று அநேக கிறிஸ்தவ விசுவாசிகளும், ஊழியர்களும் கூட  தடுமாறுகிற ஒரு பகுதியாக இது இருக்கிறது. எப்படியெனில் இன்று ஆசீர்வாதம் என்றதும் உடனடியாக எல்லோரது கவனமும் பொருளாதார ஆசீர்வாதத்தின் மீதே திரும்பி விடுகிறது. ஆனால் வேதத்தில் மிகுந்த ஆஸ்தியுடையவனாக இருக்கும் யாக்கோபு தேவனிடத்தில் இரவு முழுவதும் போராடி பெரும் ஆசீர்வாதம் என்ன வென்றால் அது ``தேவனுடைய அங்கீகாரத்தையே'' காரணம் அவன் குறுக்கு வழியில் கடந்த இருபது வருஷங்களை கழித்து விட்டான். அது மட்டுமல்ல அவன் ஒரு எத்தனாக <ஏமாற்றுக்காரனாக> இருந்து விட்டான். மிகுந்த ஆஸ்திக்கு சொந்தக்காரனாக இருந்தாலும் அவனுடைய மனம் குத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஏனென்றால் முந்திய நாள்களில் அவன் செய்த செயல்கள் அப்படி . ஆகையால்தான் தேவன் அவனிடம் உனது பெயர் என்ன என்று கேட்கிறார். கேட்டது மாத்திரமல்ல அவனை அங்கீகரித்து, அவனுக்கு இஸ்ரவேல் என்னப்படும் என்று பெயரையும் மாற்றிவைக்கிறார்.
      இன்றும் அநேகர் மென்மேலும் பொருளாதர உயர்வை மட்டுமே ஆசீர்வாதம் என்று
நினைத்துக்கொண்டு, தேவ அங்கீகாரத்தை தேடுவதை விட்டு விடுவதை காணமுடிகிறது. இது பரிதாபம். நாம் பொருளாதார உயர்வையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அதே சமயம் தேவ அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டியது  மிக மிக அவசியம். தேவ அங்கீகாரம் இல்லாமல் நம்முடைய வாழ்க்கையில் வரும் எல்லாவிதமான உயர்வும் நமக்கு உயர்வு அல்ல. மாறாக அது நமக்கு வேதனையாகவே  இருக்கும். கவனம் தேவை.  
    இக்கால கிறிஸ்தவ தலைவர்களில் அநேகர் விசுவாசிகளை தேவனிடம் கொண்டு செல்வதற்கு பதில் செல்வ செழிப்புள்ள வாழ்வைக்குறித்து மட்டும் அதிகமாக வலியுறுத்துவதை கேட்க முடிகிறது, அதே போல் தேவ அங்கீகாரத்தை விட தங்கள் பதவி, பொறுப்புக்களை மேன்மை படுத்துவதை காணமுடிகிறது. இது என்ன செய்து கொண்டு வருகிறதென்றால், பணம் படைத்தவனும், வசதிவாய்ப்புள்ளவனும், சொத்து பத்துக்கள் சேர்த்தவன் மட்டுமே தேவ ஆசீர்வாதங்களை பெற்றவன் என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கி வருகிறபடியால், இக்கால விசுவாசிகள், தேவ அங்கீகாரத்தை அதிகமாக விரும்புவதை விட, எப்படியாகிலும் வசதி வாய்ப்புக்களை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட ஆரம்பித்து விட்டனர். ஏனென்றால் அப்படி சொல்லுபவர்கள் எல்லாம் நல்ல வசதியானவர்கள். அதுமட்டுமல்ல பிரபலமானவர்கள். இன்றைய மக்களின் மனநிலையும், விசுவாச மக்களின் மனநிலையும் எப்படி இருக்கிறதென்றால், வசதி வாய்ப்போடு, பிரபலமாக இருக்கும் ஒருவர் என்ன சொன்னாலும், அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்பதை எல்லாம் கவனிப்பதே இல்லை. மாறாக அவர்கள் சொல்லுவதை கண்ணைமூடிக்கொண்டு அப்படியே ஏற்றுக்கொள்வது, ஏனென்றால் மக்களின் பார்வையில் வசதியானவர்களையும், பிரபலங்களையும் பார்த்து, அடேயப்பா! எப்படி ஆசீர்வதிக்கப்பட்டிருக்காங்க என்று பெருமிதம் கொள்ளுகிறார்கள்.
    ஆதலால்தான் இக்கால கிறிஸ்தவர்களில் அநேகர் இயேசுகிறிஸ்துவை பின்பற்றுவது எதற்காக என்றால், சரீர சுகம்; செல்வ செழிப்பு; உத்தியோகம்; வீடு; வாழ்க்கை துணை..... என ஏக்கம் கொண்டு அவைகளை அவரிடமிருந்து கேட்டு வாரிக்கொள்ள வாஞ்சிக்கிறார்கள். நம்முடைய கண்களுக்கும், ஜனங்களின் கண்களுக்கும் ஆழ்ந்த பக்தியுடையவர்களாய் நாம் காணப்பட்டாலும்கூட இன்னமும் நம் வாழ்க்கை சுயத்தை மையமாககொண்டே இருந்திட முடியும்.
    இவ்வாறு எக்காலமும் ‘நான்’ ‘எனக்கு’ ‘என்னுடைய’ என்றும், சரீர பொருளாதார ஆசீர்வாதங்கள் என்றும்.... சுய வாழ்வின் மையத்திலேயே இருந்தால். இது வேதனையன்றோ! ஒருவேளை கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஆரம்ப காலங்களில் இப்படியாக இருந்தால் பரவாயில்லை ஆனால் அதுவே தொடரக்கூடாது. ஏனென்றால் உண்மையான ஆவிக்குரிய தன்மையானது _ கோபம், எரிச்சல், இச்சைநிறைந்த சிந்தைகள், பண ஆசை போன்ற பல பாவங்களிலி­ருந்து நாம் ஜெயம் பெறுவது மாத்திரம் அல்ல! நாம் நமக்காக ஜீவிப்பதி­லிருந்து விலகுவதேயாகும், அதுதான் தேவ அங்கீகாரத்திற்குறிய மேன்மை! அதாவது, `என் சொந்த ஆதாயம்; என் சொந்த வசதி; என் சொந்த சௌகரியம்; என் சுய சித்தம்; என் சுய உரிமைகள்; எனக்கான புகழ்ச்சி; இன்னும் என்ன, என் சுய ஆவிக்குரிய நலம்...` ஆகிய இவைகளி­ருந்து விலகுவதேயாகும். சீஷர்கள் தாங்கள் ஜெபிப்பதற்கு கற்றுத்தரும்படி இயேசுவிடம் கேட்டபோது, ‘நான்’ ‘எனக்கு’‘என்னுடைய’ என்ற ஒரு வார்த்தைகூட இல்லாத ஓர் ஜெபத்தையே அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்! (லூக்கா 11:1_4). நாம் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையே தேடவேண்டுமென இயேசு நமக்கு கற்றுக்கொடுத்தார். அதாவது, நம் வாழ்வின் சிங்காசனப் பீடத்தி­லிருந்து சுயத்தை கவிழ்த்துப் போட்டு, தேவனையும் ஆவிக்குரியவைகளையுமே நம் வாழ்வின் மையமாகிய சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்ய வேண்டும்! தேவனுக்கும், உலகப்பொருட்களுக்கும் <அதாவது ஐசுவரியம், சுகபோகம், வசதி போன்றவை> ஆகிய ‘இரண்டிற்கும்’ வேலை செய்ய ஒரு மனிதனாலும் கூடாது. தேவ ஆசீர்வாதம் நம்மீதும் நம் பிள்ளைகள் மீதும் தங்கியிருப்பதை வைத்து, தேவன் நம்மீது மகிழ்ச்சியாய் இருக்கிறார் என்பதற்கு ஓர் அடையாளமாக நாம் இன்னமும் எண்ணிக் கொண்டிருபோமென்றால், சாத்தான் நம்மை நன்றாய் வஞ்சித்துவிட்டான் என்பதற்கு சந்தேகமேயில்லை.
    பொருளாதார உயர்வு ; தேவ அங்கீகாரம் ஆகிய இவ்விரண்டும் முழுக்க முழுக்க வித்தியாசமான எதிர்முனைகள்! நாம் இப்பூலோக ஜீவியத்தை ஓடி முடிக்கையில் பெறவேண்டிய சாட்சி எதுவென்றால், ஏனோக்கு இப்பூமியை விட்டுச் செல்லுகையில் பெற்ற `அவன் தேவனுக்குப் பிரியமானவன்` (எபிரேயர் 11:5) என்ற சாட்சியேயாகும்! ஆகவே `பொருளாதார உயர்வு பெற்றவன்,நல்ல வசதியோடு வாழ்ந்தவன்` என்ற சாட்சியில் எந்த மதிப்பும் இல்லவே இல்லை. ஏன் தெரியுமா? இவ்வுலகில் வாழும் கோடானுகோடி அவிசுவாசிகள் கூட இந்த சாட்சியைப் பெற்றுக் கொள்ள முடியுமே!! இன்று தேவன், தன்னுடைய பொருளாதார ஆசீர்வாதத்தை மட்டு மல்லாமல், தேவ அங்கீகாரத்தையே பிரதானமாய் வாஞ்சிப்பவர்களைக் காண்பதற்கு தவியாய்தவித்து நோக்கிக் கொண்டிருக்கிறார்!    
அப்படிப்பட்டவர்களுக்கு இரண்டு விதமான நன்மைகளையும் கொடுக்க காத்திருக்கிறார். நாம் தேவ அங்கீகாரத்தை தேடுவோம், தேவன் பொருளாதார ஆசீர்வாதத்தையும் சேர்த்து தருவார்.


1 comments:

  1. தற்போதை போதகர்கள் நடுவில், உங்களுடைய கட்டுரைகள் வித்தியாசமான கோணத்தில், விழிப்புணர்வு ஊட்டுவதாக உள்ளன. இதைப் படித்தவுடன்தான், என்னையும் சிந்திக்க வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete